எரி சக்தியும் அதன் தற்போதைய பயன்பாடும்

செயல்படுவதற்குரிய ஆற்றல்தான் சக்தி

எரி சக்தியும் அதன் தற்போதைய பயன்பாடும்

கிராமப்புறங்களில் எரிசக்தியின் தேவை சீரான முறையில் அதிகரித்துக்கொண்டேவருகிறது. தற்போது, எரிசக்தியின் 75% பயன்பாடு, வீடுகளில் சமைப்பதற்கும், விளக்குகளுக்காகவும், விவசாயத்திற்கும் செலவாகிறது. மின்சாரத்தைத் தவிர, உள்ளூரிலேயே கிடைக்கக் கூடிய, வீடுகளில் தாவர கழிவுகள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவைப் பெரும்பாலும் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தைப் பொருத்தவரை, பாசனத்திற்கு தான் அதிக ஆற்றல் செலவாகிறது. இதற்கு மின்சாரமும், டீசலும்தான் எரிபொருளாகப் பயன்படுகிறது. விவசாய செயல்பாடுகளில், பெருமளவில் பயன்படும் மனித ஆற்றல், பெரும்பாலும் கவனிக்கப்படுவதேயில்லை. அதே சமயத்தில் மனித ஆற்றலின் பயன்பாடு, ஒரு கிராமத்திற்குள்ளேயே வசதி படைத்தோர் - ஏழைகள், நன்சை - புன்சை நிலம், ஆண்கள் - பெண்கள் ஆகியவற்றைப் பொறுத்தும் வேறுபடுகிறது.

இந்தியாவில் தற்போதய ஆற்றல் பயன்பாடு

 இந்தியாவில் கிராமப் பகுதிகளில், 70% மக்கள் வசிக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சி வேகம் குறையாமல் இருக்க, கிராமப் பகுதிகளில் எரிசக்தி மேம்பாடு மிகவும் அவசியமாகிறது. நமது நாட்டில், 21 சதவீத கிராமங்களிலும் 50 சதவீத கிராமப்புற வீடுகளிலும் இன்னும் மின்சார இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
அதேபோல், தனிநபர் மின் நுகர்வில், கிராமப் பகுதிகளுக்கும் நகரப் பகுதிகளுக்கும்மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணமாக, 75% கிராம வீடுகளில் சமையலுக்கு விறகு மற்றும் சுள்ளிகளையே உபயோகிக்கிறார்கள். 10% பேர் வரட்டியையும், 5% பேர் சமையல் எரிவாயுவையும்(எல்.பி.ஜி.) உபயோகிக்கின்றனர். நகரங்களில் 22% பேர் சமைப்பதற்கு விறகுகளை உபயோகிக்கின்றனர். மேலும் 22% பேர் மண்ணெண்ணெயைச் சார்ந்து இருக்கின்றனர். 44% பேர் எல்.பி.ஜி.யைச் சார்ந்துள்ளனர். அதேபோல் வீடுகளில் விளக்கு எரிப்பதற்கு, 50% கிராம மக்கள் மண்ணெண்ணையையும், மேலும் 48% பேர் மின்சாரத்தையும் சார்ந்துள்ளனர். ஆனால் நகரங்களில், 89% வீடுகளில் மின்சக்தியைச் சார்ந்தும், 10% பேர் மண்ணெண்ணையைச் சார்ந்து உள்ளனர்.
எரிபொருளாகப் பயன்படும் விறகுகளைத் தேடிச் சேர்ப்பதற்கும் சமையலுக்கும் பெண்கள் தினமும் நான்கு மணிநேரம் செலவிடுகின்றனர். விறகுகள் சேகரிப்பதில் குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை அனைத்தும் சம்பளம் பெறாத மனித உழைப்பாகும்.
எரிசக்தியைப் பெறுவது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம்.  எரிசக்தி என்பது நமது அன்றாட வாழ்வில் மையமான இடத்தைப் பிடித்துள்ளது. சமையல், தூய குடிநீர் பெறுவது, விவசாயம், கல்வி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழலைக் காப்பது போன்ற அனைத்திற்கும் எரிசக்தி தேவைப்படுகிறது.
கிராமப்புற எரிசக்தியில் 80%, தாவர பொருட்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இதனால், ஏற்கெனவே குறைந்துவரும் கிராமப்புற தாவர வகைகளின் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இயங்குதிறன் குறைந்த அடுப்புகளை உபயோகிக்க வேண்டியிருப்பதால், விறகுகளைச் சேகரிக்கச் செல்லும் பணியில் ஈடுபடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வேலைப்பளு மேலும் அதிகமாகிறது. மேலும், இந்த அடுப்புகளிலிருந்து வரும் புகை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மூச்சுக் கோளாறுகளை மிக அதிக அளவில் ஏற்படுத்துகிறது.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: