தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டம்

தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டமானது 2008 ஜீன் 30ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இத்திட்டம் வளர்ச்சியை முன்னிறுத்தும் நோக்கத்தையும், அதே சமயத்தில் தட்ப வெப்பநிலை மாற்றங்களை எதிர்நோக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய செயல் திட்டத்தில் எட்டு தேசிய இயக்கங்கள் உள்ளன. இதன் முக்கியமான பணிகளாவன, தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுவதை குறைத்தல் மற்றும் அதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறைகளை கடைபிடித்தல், சக்தியை அதிக திறன்பட முறையாக பயன்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியன.

தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தில் காணப்படும் எட்டு தேசிய இயக்கங்கள்

  1. தேசிய சூரிய ஒளிசக்தி இயக்கம்
  2. தேதிய திறன்பட சக்தி பயன்பாட்டு இயக்கம்
  3. தேசிய நிலையான வசிப்பிட இயக்கம்
  4. தேசிய தண்ணீர் இயக்கம்
  5. தேசிய நிலையான ஹிமாலய மாலைவாழ் பாதுகாப்பு இயக்கம்
  6. தேசிய பசுமை இந்திய இயக்கம்
  7. தேசிய நிலையான வேளாண்மை இயக்கம்
  8. தேசிய, தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த நுண்ணறிவு இயக்கம்.
i. தேசிய சூரியஒளி சக்தி இயக்கம்

இந்த இயக்கத்திற்கு, தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வியக்கத்தின் நோக்கம் நாட்டின் மொத்த சக்தியில் சூரியஒளி சக்தியின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகும். மேலும் இதனுடன் மற்ற புத்தாக்க சக்திமூலங்களையும் விரிவுபடுத்துவதும் ஆகும். இந்த தேசிய இயக்கம் இதற்காக ஒரு ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவைத் துவக்க உள்ளது. இதற்கு உலக கூட்டுறவு நிதிநிறுவனங்களின் உதவி பெறப்பட உள்ளது. இதன் மூலம் செலவு குறைவான, நீடித்த, வசதியான சூரியஒளி சக்தியை ஈர்க்கும் முறை கண்டுபிடிப்பப்படும்.

தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டத்தின் கீழ், தேசிய சூரியஒளி சக்தி இயக்கம் மூலம், 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குறைவாக பயன்படுத்தப்படும் நகர்புற தொழிற்சாலைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களின் செயல்பாடுகளில் சூரிய சக்தியை 80சதம் அளவிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிதமான தட்ப வெப்பநிலை (அதாவது 150 - 250 டிகிரி செல்சியஸ்) பயன்படுத்தும் இடங்களில் 60சதம் அளவிற்கு சூரிய சக்தியை பயன்படுத்த செய்ய வேண்டும். இந்த இலக்கானது 11வது மற்றும் 12வது ஐந்து ஆண்டு திட்ட காலத்திற்குள் அதாவது 2017க்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் இத்திட்டத்தின் மூலம் சூரிய ஒளிப்பயன்பாடானது கிராமப்புறங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு எடுத்துச்செல்லப்படும்.



ii. தேதிய திறன்பட சக்தி பயன்பாட்டு இயக்கம்

மத்திய அரசு ஏற்கனவே சக்தி பயன்பாட்டுத்திறனை அதிகப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனுடன் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டம் எதிர்பார்ப்பது என்னவென்றால்,  

  • அதிகளவு சக்தி / மின்சாரம் பயன்படுத்தும் தொழிலகங்களில் சக்தி/மின்சாரம் சேமிப்பு செய்து, சேமிக்கப்பட்ட சக்தியை மற்ற உபயோகங்களுக்கு விற்பனை செய்யக்கூடிய வியாபார முறைகளை ஏற்படுத்துதல்
  • சக்தி / மின்சாரம் மிச்சப்படுத்தும் கருவிகளை/ பொருட்களை பயன்படுத்தக்கூடிய வகையில் அதன் விலையைக் குறைத்தல்
  • இம்மாதிரியான திட்டங்களுக்கு நிதித்தட்டுப்பாடு இல்லாத வகையில் அரசு, தனியார் கூட்டு முயற்சி ஏற்பட, எதிர்கால சக்தி / மின்சாரம் சேமிப்பின் மூலம் பயனடைய உள்ள திட்டங்களுக்கான வழிமுறை செய்தல்.
  • சக்தி சேமிப்பை அதிகப்படுத்தும் வகையில், வரி விலக்குகள், சக்தியை மிச்சப்படுத்தும் கருவிகள்/ உபகரணங்களை உபயோகிப்போருக்கு வரி விதிப்பில் சில சலுகைகள் போன்றவை ஏற்படுத்துதல்.


iii. தேசிய நிலையான வசிப்பிட இயக்கம்

இந்த இயக்கத்தின் நோக்கமே, நிலையான வசிப்பிட வசதியை மூன்று முறைகளில் வழங்குவதே. அவையாவன,

  • வசிப்பிடங்களில், வியாபார ஸ்தலங்களில், கட்டிடங்களில் சக்தி/ மின்சாரப் பயன்பாட்டுத் திறனை அதிகப்படுத்தும்  மாற்றங்களைக் கொண்டு வருதல்.
  • நகராட்சி திடக் கழிவுகளை மேலாண்மை செய்தல்
  • நகர்புறமக்கள் பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்


iv. தேசிய தண்ணீர் இயக்கம்

இவ்வியக்கம், தண்ணீர் சேமிப்பதிலும், வீணாவதைத் தடுப்பதிலும், அனைவருக்கும் சீரான நீர் வினியோகத்தை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. தண்ணீர் இயக்கம், தண்ணீர் பயன்பாட்டுத்திறனை 20 சதம் அதிகப்படுத்த வழி முறைகளை உருவாக்கும். பரவலாக மழை பெய்யும் போது, ஆறுகளில் நீரோட்டத்தை சீர்படுத்துவது, நீர் நிலைகளிலும், நிலத்தடியிலும் நீரை சேமிப்பது, மழை நீர் அறுவடை, சிறப்பான பாசன அமைப்புகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக்ருவிகளை அமைப்பது ஆகியவற்றில் தண்ணீர் இயக்கம் கவனம் செலுத்தும்.



v. தேசிய நிலையான ஹிமாலய மலைவாழ் பாதுகாப்பு இயக்கம்

கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பஞ்சாயத்துக்கு, வாழும் சூழலை பாதுகாப்பதிலும், நிர்வகிப்பதிலும் அதிக பங்கு உண்டு என்பதை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கை -2006ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சில கருத்துக்களை இவ்வியக்கம் நினைவூட்டுகிறது. அவையாவன.

  • மலை வாழ் பகுதிகளை வளம்பெற வைக்க, நீடித்து இருக்க செய்ய, நில உபயோகத்திட்டம், நீர்வழிப்பகுதி மேலாண்மை போன்ற முறைகளை கடைபிடித்தல்.
  • மலை பிரதேசங்களில், மலை வாழ் பகுதிகளை பாதுகாக்கும் வகையில் கட்டுமான அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இதன் மூலம் மலைச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்தல்.
  • பாரம்பரிய விதைகள் மற்றும் பயிர்களை சாகுபடி செய்தல், இயற்கை வேளாண்மையை கடைபிடிக்க ஊக்குவித்தல், அதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கச் செய்தல்
  • வருடம் முழுவதும் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், அவர்கள் வாழ்வு ஆதாரம் பெருகும் வகையில், மலைப்பகுதிகளுக்கு சுற்றலாப்பயணிகளை ஈர்த்தல்
  • சுற்றுலாப் பயணிகளின் வருகையால், மலைவாழ்ச்சூழல் பாதிக்காத வண்ணம், அந்த சூழல் தாங்கும் வகையில் பயணிகளின் போக்குவரத்தை திட்டமிடுதல்
  • ஒப்பிட்டு பார்க்க இயலாத மதிப்புமிகு மலைப்பிரதேசங்களின் இயற்கை அழகையும், சூழலையும் பாதுகாக்கும் வண்ணம், சில ஒழுங்கு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்


vi. தேசிய பசுமை இந்திய இயக்கம்

இந்த இயக்கத்தின் நோக்கமே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை ஊக்குவித்தல் ஆகும். பாரத பிரதமரின் பசுமை இந்திய இயக்கத்தில் 6 மில்லியன் ஹெக்டேரில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை உருவாக்குதல் மற்றும் 23 சதத்திலிருந்து 33 சதப் பரப்பிற்கு வனங்களைக் கொண்டு வருதல் ஆகியன இந்த இயக்கத்தின் முக்கிய பணிகளாக உள்ளன. இப்பணியானது அழிந்த காடுகளில், மாநில வனத்துறை உருவாக்கியுள்ள வனக்குழுக்களின் ஒத்துழைப்புடன் செய்யப்படும். இந்த வனக்குழுக்கள் நேரடி செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.



vii. தேசிய நிலையான வேளாண் இயக்கம்

இந்திய வேளாண்மையினை தட்பவெட்பநிலை மாற்றத்தினால் பாதிப்படையா வண்ணம், புதிய பயிர் ரகங்கள், குறிப்பாக வறட்சியைப் தாங்கும் ரகங்கள், மாற்றுப்பயிர் சாகுபடித்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துதல், இந்த இயக்கத்தின் முக்கிய பணியாகும். பாரம்பரிய முறைகளைக் கொண்டும் கிராமப்புற மூத்த விவசாயிகளின் ஆலோசனைப் பெற்றும், தகவல் தொழில் நுட்பம், உயிரியல் தொழில் நுட்பம், கடன் உதவி, காப்பீட்டு வசதி, போன்ற செயல்பாடுகள் நீடித்த நிலையான வேளாண்மைக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்படும்.



viii. தேசிய தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த நுண்ணறிவு இயக்கம்

உலகளவிலான ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் பல்வேறு செயல்பாடுகளுடன் இந்த இயக்கம் சேர்ந்து பணியாற்றும். அத்துடன் தனக்கே உரிய ஆராய்ச்சி பணிகளை இந்த இயக்கமானது தட்பவெட்பநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், பல்கலைக்கழகங்களுடனும், தட்பவெப்பநிலை ஆராய்ச்சி நிதி கொண்டு செய்து வரும். மேலும் தனியார் நிறுவனங்களின் புதிய கண்டு பிடிப்புகளை அதாவது பயன்படுத்துவதற்கேற்ற புதிய கண்டுபிடிப்புகளையும் இந்த இயக்கம் ஊக்கப்படுத்தும்.



இயக்கங்களின் செயல்பாடு

இந்த 8 தேசிய இயங்கங்களும், அந்தந்த அமைச்சரவையின் கீழ் செயல்படும். மேலும் இந்த செயல்பாடுகளை கண்காணிக்க, சம்பந்தப்பட்ட அமைச்சரவை, நிதி அமைச்சகம், திட்டக்குழு, தொழிலக நிபுணர்கள், கல்வி, மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்படும்.



மூலம்: http://pmindia.nic.in

மிகப்பெரிய அளவிலான சூரிய சக்தி உற்பத்திக்கான தொடக்கம்


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: