கருச்சிதைவு/ குறைப்பிரசவம்

கர்ப்பந்தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை. சில வேளைகளில் கர்ப்பகாலம் ஒன்பது மாதங்கள் நிறைவுபெறாமலேயே இடையிலே தானாக கலைகிறது. இதனை கருச்சிதைவு/குறைப்பிரசவம் (அ) தானாக எற்படும் கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. கருச்சிதைவு பொதுவாக 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் மகப்பேறு காலங்களை இடையிலேயே அறுவைச்சிகிச்சையின் மூலம் இடையிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தூண்டுதலின் பேரில் செய்யப்படும் கருச்சிதைவு எனப்படுகிறது.

குறைப்பிரசவம்/கருச்சிதைவு (அ) தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவு

கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் உள்ள போதும் ஏற்படும் கருச்சிதைவை குறைப்பிரசவம் என்பர். இது முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.



கருச்சிதைவு எதினால் ஏற்படுகிறது?

பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும். மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும். சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.



கருச்சிதைவுக்கான அடையாளங்கள்

கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.



முழுமையான கருச்சிதைவு

கருப்பையில் வளர்கின்ற கரு சிதைவடைந்து, அக்கரு மற்றும் அதனை சூழ்ந்துள்ள திசுக்களும் முழுவதுமாக பெண்குறியின் வழியாக வெளியேற்றப்படுவது முழுமையான கருச்சிதைவு எனப்படும். இப்படி முழுமையான கருச்சிதைவு எற்படும்போது, இரத்தப் போக்கு கருச்சிதைவுக்குப் பின் சில நாட்களில் நின்றுவிடுகிறது. இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2-4 வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.



முற்றுப் பெறாத கருச்சிதைவு

சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும். கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும். முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.



திரும்பபத்திரும்ப ஏற்படும் கருச்சிதைவுகள்

சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.



தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போட வேண்டும். பின்னர் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண்குறியின் வழியாகச் செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார். இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக்கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகுந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆபத்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற்று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.



சட்ட நிரூபணம்

தேசிய மக்கள் தொகை கொள்கை 2000 ல் கூறப்பட்ட மக்கள் தொகை நிலைப்படுத்தலுக்கான வழிமுறைகளை செயல்படுத்த சட்டங்கள் அவசியம். குறிப்பிட்ட நோக்கங்களுக்காய் இயற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் உள்ளன. அவைற்றைப் பற்றிய விளக்கம்.



கருவில் உள்ள குழந்தையினை ஸ்கேன் செய்து பரிசோதித்தறிவதை ஒழுங்குபடுத்தும் சட்டம்.

மேற்கூறிய சட்டம் மற்றும் விதிகள் வடிவமைக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு ஜனவரி மாத ஒன்றாம் தேதி (1.1.1996) லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய சட்டத்தின்படி கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை மட்டும் ஆராய்ந்துணரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என் ஆராய்ந்துணர்வதை தடை செய்கிறது. இந்த சட்டத்தை மீறுவோறுக்கு தண்டனையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. த ப்ரிநேடல் டையக்னோஸ்டிக் டெக்னிக் (ரெகுலேஷன் மற்றும் ப்ரிவெண்டிங் ஆ ஃப் மிஸ்யூஸ்) ஆக்ட் என்பது கருவில் உள்ள வளரும் குழந்தை பெண்ணா என்பதனை கண்டறிந்து பெண்சிசு கொலை செய்வதை தடுத்து நிறுத்த வகை செய்யும் நடைமுறையில் உள்ள சட்டம்.



மெடிகல் டெர்மினேஷன் ஆ ஃப் ப்ரெக்னென்ஸி ஆக்ட்

மருத்துவமுறையின்படி கர்ப்பத்தினை குறித்த காலத்திற்கு முன்பே முடிவுக்குகொண்டு வருவதை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்
கருச்சிதைவு ஏற்படுவதின் மூலம் ஏற்படும் உடற்நலக்குறைவு மற்றும் இறப்பு எண்ணிக்கை போன்றவற்றைக் கட்டுப்படுத்த மேற்கூறிய சட்டம் 1971 ஆண்டு பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து (1.4.1972) ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர இந்தியாவின் அனைத்து பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
மேற்கூறிய சட்டம் கருச்சிதைவினை எந்த தேகநிலையில், எந்த நபரால் எந்த இடத்தில் செய்ய வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டுகிறது.
மேற்கூறிய சட்டம் கீழ்க்காணும் சூழ்நிலையில் கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம் என குறிப்பிடுகிறது.

  • மருத்துவமுறைப்படி தாயின் தேகநிலை

தாயானவள் ஏதேனும் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ (அ) மனநல பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ (அ) அவளுக்கு வேறு உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழலில் கர்ப்பகாலத்தை தொடர்வதினால் உயிருக்கே ஆபத்து (அ) உடல் மற்றும் மன அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற சூழ்நிலையில், கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம்.

  • யூஜெனிக்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய் தொற்று, மருந்துகளை உட்கொள்ளுதல், எக்ஸ்ரே மற்றும் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படுதல், இரத்த வகைகள் பொருந்தாத நிலையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பைத்தியமான நிலையில், பிறக்கும் குழந்தைக்கு உடல்நலம் மற்றும் மனநலம் குன்றி பிறக்கும் என்ற ஆபத்தான நிலை ஏற்படும்போது கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம்.

  • மனிதாபிமான அடிப்படையில்

கருணை அடிப்படையில் கற்பழிப்பின் விளைவால் ஏற்படக்கூடிய கர்ப்பம்

  • கர்ப்பம்

மேற்கூறிய சட்டத்தின்படி, மருத்துவ முறைபடி கருச்சிதைவை, பதிவு பெற்ற, பிரசவ மற்றும் பெண்கள் நோய் பிரிவில் அனுபவம் வாய்ந்த, பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் மாத்திரமே செய்ய வேண்டும். கர்ப்பம் 12 வாரங்களுக்கு
உட்பட்டிருப்பின் ஒரு தனி மருத்துவ நிபுணர் மற்ற மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருச்சிதைவு செய்யலாம். ஆனால் கர்ப்பம் 12 வார காலங்களுக்கு மேற்பட்டிருப்பின், இரண்டு மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி பேசி முடிவெடுத்த பின்னர், அவர்களுள் ஒருவர் கர்ப்ப காலத்தினை முடிவுக்குக் கொண்டு வரலாம். கர்ப்ப காலம் 20 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களாயிருக்கும் போது, கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசரநிலை ஏற்படும்போது தனி ஒரு மருத்துவ நிபுணர் மற்ற எந்த மருத்துவரையும் கலந்தாலோசிக்காமலும் மற்றும் அங்கீகாரம் பெறாத மருத்துவமனையிலும் கருச்சிதைவு முறையினை செய்யலாம்.
பெண்களின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறுவது அவசியம். ஒரு வேளை பெண்கள் வயதில் மைனராக இருந்தாலோ அல்லது மயக்கநிலையில் சுயநினைவற்றிருந்தாலோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமான நிலையிலிருந்தாலோ, பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம். எம்.டி.பி ஆக்ட் 1971ன் படி கருச்சிதைவு செய்து கொள்ளும்போது இதனை ஒரு குறிப்பிட்ட நபரின் சொந்தப்பிரச்சினையாகப் பாவிக்கப்படுகிறது. கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களின் விவரம் இரகசியமாக காக்கப்பட வேண்டும்.
இப்படி ஒரு மருத்துவர், கருச்சிதைவு முறையினை கையாளும் போது, போதிய முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் பராமரிப்பினை மேற்கொண்டால், கருச்சிதைவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளிலும் சட்ட நடவடிக்கைகளிலுமிருந்து பாதுகாக்கப்படுவார். ஆனால் விதிகள் மீறப்படும் போது மருத்துவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
கர்ப்பத்தினை எம்.டி.பி முறைப்படி மருத்துவ அடிப்படையிலும் மற்றும் யூஜெனிக் அடிப்படையிலும் முடிவுக்குக் கொண்டு வருவது தாய் மற்றும் பிள்ளைக்கு நல்லது.
ஆனால் விரும்பத்தகாத, குறிப்பாக கர்ப்பத்தில் வளரும் பெண் குழந்தையை, கர்ப்பத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் அழித்தல் என்பது ஒரு அநீதியான மற்றும் சமூக விரோதச் செயல். எனவே இதனை அனுமதிக்கக்கூடாது மாறாக தடை செய்யப்படவேண்டும். அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வது தாயின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது.
இது உடல்நலக்குன்றல் மற்றும் மரணத்தினை தோற்றுவிக்கும். எனவே பெண்களுக்கு இதனை விளக்கிக்கூறி பிற கருத்தடைமுறைகளை மேற்கொள்ளும் படி உற்சாகப்படுத்த வேண்டும்.
த எம்டிபி ஆக்ட் என்கின்ற சட்டம் 1975 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. கீழ்க்காணும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

  • கருச்சிதைவு முறையினை மேற்கொள்வதற்கு, மருத்துவருக்கு தேவையான சான்று வழங்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னர், இவ்வதிகாரம் சான்றளிக்கும் மன்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது
  • கருச்சிதைவு செய்யும் மருத்துவருக்கான தகுதிகள்
  • அ) 25 மருத்துவ முறைப்படி கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (எம்டிபி) க்களில் உதவியாக பணிபுரிந்து அனுபவமுள்ள பதிவுபெற்ற மருத்துவராக இருக்க வேண்டும்.
  • ஆ) பிரசவ மற்றும் பெண்கள் நோய் மருத்துவத்துறையில் ஆறு மாதம் பயிற்சி பெற்ற மருத்துவர்.
  • இ) பிரசவ மற்றும் பெண்கள் நோய் மருத்துவத்துறையில் பட்ட மேற்படிப்பு பெற்றவர்.
  • ஈ) 1971-ல் இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன் மருத்துவபடிப்பை முடித்து இத்துறையில் (ஓபிஜி) மூன்று ஆண்டுகள் அனுபவம் வென்றவர் மற்றும்
  • உ) இச்சட்டத்திற்கு பின் மருத்துவ படிப்பை முடித்து இத்துறையில் ஓராண்டு அனுபவம் பெற்றவர்.
  • அரசு சாரா நிறுவனங்கள் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரியினிடம் உரிமம் பெற்றபின் கருச்சிதைவு பணிகளைச் செய்யலாம்.


கருச்சிதைவு செய்முறைக்கான தகவல்கள்

கருச்சிதைவுச் செய்துகொள்ளும் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச தகவல்கள்

  1. கருச்சிதைவு செய்யப்படும்போதும் அதற்கு பின்னரும் என்ன செய்யப்படும் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
  2. கருச்சிதவினால் ஏற்பட்வுள்ள விளைவுகள் உ.ம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சதைபிடிப்பு, வலி மற்றும் இரத்தப்போக்கு
  3. கருச்சிதைவு முறை எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
  4. வலியைக் குறைக்க எம்மாதிரியான முறைகள் கையாளப்படிகின்றன.
  5. இம்முறையில் ஏற்படும் ஆபத்து மற்றும் சிக்கல்கள்.
  6. இம்முறையில் கருச்சிதைவு செய்தபின் எப்பொழுது சாதாரண வேலைகளில் ஈடுபடவேண்டும், தாம்பத்திய உறவும் சேர்த்து. மற்றும்
  7. பின் தொடர் பராமரிப்பு.

பெண்ணானவள் கருச்சிதைவுச் செய்ய முன்வரும் போது, கர்ப்ப காலத்தின் காலஅளவு, பெண்ணின் மருத்துவ ரீதியான உடல்நிலை, எற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் எந்த வகையான முறைகளைக் கொண்டு கருச்சிதைவு செய்யப்படும் என்ற அனைத்து விவரங்களை அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

8.   HIV யினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருச்சிதைவு சிகிச்சை பெரும் போது, அவர்களுக்கு சிறப்புத் தகவல்கள் (கருச்சிதைவில் HIV யின் பங்கு) கொடுக்கப்பட வேண்டும்






Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: